விழித்திருக்க கிடைத்த இரவுகளில்
உரசிச் செல்கிறது
கடந்தகால கசப்புகள்
நிகழ்காலத்தின் நிஜங்கள்
எதிர்காலத்தின் ஏக்கங்கள்
புரண்டு புரண்டு படுத்தாலும்
முரண்டு பிடிக்கிறது தூக்கம்
மூலையில் கிடந்ததெல்லாம்
மூளையில் மின்சாரம் பாய்ச்சுகிறது
வருவது வரட்டும் என்று
மனதுக்குள் எண்ணினாலும்
வந்து கொண்டே இருக்கிறது
எனது நினைவுகள்..
முதுமை நெருங்க நெருங்க
விழித்திருக்கும் இரவுகளும்
விரிந்து கொண்டே செல்கிறது..
விழித்திருக்க கிடைக்கும் இரவுக்காக
இளமை அலைபாய்கிறது
முதுமை அசை போடுகிறது..
நான் என்ற அகம்பாவம் ஆணவம்
இவையாவும்
இருளின் மொழியாகி
இதயத்தில் ஆட்சி செய்யும்
எல்லாம் மாயை என்று உணரும் காலம்
உறுப்புகள் செயல் இழந்து
உடல் தளரும் காலம்
கண்மூடி மண்ணுக்குள்
நாம் செல்லும் காலம்...
விளக்கின் ஒளியினால் புற இருள் மறையும்
ஆசை விலக்கினால் அக இருள் மறையும்..
No comments:
Post a Comment