மனதின் வெளிப்பாடு


Monday 24 October 2022

இல்லம் தேடி வருகிறோம்


எங்களிடம் இருப்பதெல்லாம்

எங்களுக்கு சொந்தம் இல்லை

ஆணையை ஏற்று நடக்கிறோம்

சிறந்த எடுத்துக்காட்டாய்

தினந்தோறும்... 


எங்களிடம் இருப்பதை

இல்லாதவர்களுக்கு கொடுக்க

எங்களால் முடியாது

அவரவர்களுக்கு உரியதை

அவரவர்களிடம்

ஒப்படைத்து மகிழ்கிறோம்... 


வாகனமும், அலைபேசியும்

எங்கள் வழித்துணை மட்டுமல்ல

வாழ்க்கைத் துணை.... 


அலைபேசி பயன்பாட்டில்

நாங்கள் முக்கிய அங்கம்

அலைபேசியில் ஆரம்பித்து

அதனாலேயே தொடர்கிறது

எங்கள் பயணம்.... 


எங்களுக்கென்று அடையாளம் உண்டு

௭ங்களின் அடையாளத்தை வைத்து

எங்களை உபயோகப்படுத்துகிறார்கள்... 


உங்களுக்கான தேடல்கள்

எங்களுடையது ஆகும்போது

எங்களுக்கு மகிழ்ச்சி.... 


எங்கள் சிக்னல் எப்போது வரும்?

காத்திருக்கிறோம் நாங்கள்

சிக்னலுக்காக காத்திருந்து

பல சிக்னல்களை கடந்து

பயணிக்கிறோம் நாங்கள்.... 


பல மேடு பள்ளங்களை

அன்றாடம் கடக்கிறோம்

வாழ்க்கை சீரானது அல்ல

சிக்கல்கள் நிறைந்தது

மேடு பள்ளங்களை உள்ளடக்கியது

உணர்கிறோம் நாங்கள்.... 


கொட்டும் மழையிலும்

சுட்டெரிக்கும் வெயிலிலும்

தொடர்ந்து பயணிக்கிறோம்

உழைப்பின் உயர்வை உணருகிறோம்.... 


நிகழ்காலத்தின்

நிஜத்தை புரிந்து கொண்டு

நாங்கள் பெற்ற

பட்டம் மறந்து பயணிக்கிறோம்

எங்களுக்கான தேவைகளை

பூர்த்தி செய்ய...


உங்களுக்கான தேவைகள் மட்டுமல்ல

எங்களுக்கான தேடல்கள்...


ஆயிரம் கனவுகளோடு

அன்றாடம் பயணிக்கிறோம்

அட்சய பாத்திரமான

எங்கள் பைகளில்

உங்களுக்கான உணவுகளைச்

சுமந்துகொண்டு...

உங்கள் இல்லம் தேடி வருகிறோம்.




Thursday 20 October 2022

நீ சாதிக்க பிறந்தவன்


புதிய உத்வேகத்தோடு புறப்படு

புதுமைகள் செய்யும் நோக்கோடு

விதைக்கிற விதை தான் முளைக்கும்

வீரியமும் கவனமும்

காரியத்தின் அனுகூலங்கள்


எண்ணி எண்ணி

ஆனந்திப்பது சுலபம்

எது வந்தாலும் 

சாதிப்பது கடினம்


கற்பனைக்கோட்டை

எல்லையின்றி விரியும்

காணிநிலம் நிஜம் என்றால்

அடையும் கடினம் புரியும்


நிழல்களின் அடையாளத்தில்

நிஜங்களை தொலைக்காதே

வீணான கற்பனையில்

காலத்தை நகர்த்தாதே


மணமில்லா மலர்

மணம் பரப்புமா?

திறன் இல்லாத தொழில்

மனம் கவருமா?


உளியின் கூர்மை

பாறையைப் பிளக்கும்

உள்ளத்தின் கூர்மை

வெற்றியைக் குவிக்கும்


பத்தோடு பதினொன்றாய்

வாழ்ந்தது போதும்

பதிவுகள் உன்னால் என்று

வாழ்த்தட்டும் தேசம்


சரியான பார்வை

சரியான தீர்வு

முறையான வாழ்வே

முன்னேற்றத்தின் சுவடு


உன்னை அறி முதலில்

உயரும் வழி எதிரில்

மாற்றம் தானே நிரந்தரம்

தோல்வி எப்படி தினம் வரும்?


உன்னுள் மனமாற்றம்

உயர்வுக்கு வழிகாட்டும்

தடுமாற்றம் தோல்வி தகரும்

நீ முயன்றால் எதுவும் முடியும்.


Wednesday 19 October 2022

ஆன்லைன் விளையாட்டும் சூதாட்டமும்


ஆபத்தை விளைவிக்கும் அனேக விஷயங்களில்

ஆன்லைன் சூதாட்டமும் ஆபத்தானது

ஆசைகாட்டி அடிமைப்படுத்துகிறது

அடிமைப்படுத்தி உயிரைப் பறிக்கிறது.


இளைய சமுதாயத்தின்

கற்கும் திறனை குறைக்கிறது

கவனச் சிதைவுக்கு காரணமாகிறது

கண்களில் குறைபாடு உண்டாகிறது

உடல்நலனில் சேதாரம் விளைவிக்கிறது

மனநலம் பரிதவித்து நிற்கிறது

படைப்பாற்றல் பாழ்பட்டுப் போகிறது

கோபமோ உச்சியைத் தொடுகிறது

கண்ணியம் காற்றில் பறக்கிறது

கவலையின்றி கண்டபடி சுற்ற வைக்கிறது

ஆசை கொண்ட மனிதனின்

பொருளாதாரத்தை சுரண்டுகிறது

சமூக ஒழுக்கத்தைப் பாழ்படுத்துகிறது

தற்கொலைக்கு தூண்டுகிறது 

குடும்பத்தை சீரழிக்கிறது.


ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடைவிதிக்க

அவ்வப்போது குரல் ஒலித்தாலும் 

ஒழிப்பதற்கான மசோதா சட்டசபையில் நேற்று

மகிழ்ச்சியுடன் அரங்கேறியது

ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை ஆணையம்

அரசின் கட்டுப்பாட்டில் புதிதாய் இயங்கப் போகிறது

சூதாட்டம் தவிர்த்த ஆன்லைன் விளையாட்டுகளை ஆணையம்

ஒழுங்குபடுத்த போகிறது

ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவோருக்கு

தண்டனை கடுமையாக்கப் பட்டுள்ளது

நல்ல செய்தி தான், மகிழ்ச்சிதான் 


மனதின் ஆழத்தில் ஒரு குரல்

'குடி' என்னும் அரக்கனை ஒழிக்க

அரசு எப்போது முன் வரப்போகிறது?

நிதிநிலை காரணமாய் இருக்கலாம் என்றாலும்

படிப்படியாய் 'குடி'யை குறைப்பதற்கு

முயற்சிகள் செய்யலாமே...?

  

பொருளாதார வளர்ச்சி


பொருளாதார வளர்ச்சி
தனிநபர் வருமானத்தின் எழுச்சி
பசிப்பிணி முற்றும் நீங்கி
செழிப்பதுதானே
உண்மை சுதந்திர எழுச்சி.

மக்கள்தொகையின் அழுத்தம்
அறிவுத்திறனில் மேம்பட்டால்
இயற்கை வளம் இனிதானால்
அச்சம் தவிர்த்திடலாம்
உயர்வாய் வாழ்ந்திடலாம்.

உழவு தொழில் செய்வோன்
மிகுதியான உணவு பெறுவான்
கடந்த கால நினைவுகள்
காற்றில் கரைந்து விட்டது
நிகழ்காலக் காட்சிகள்
புரிதலுக்கு சாட்சிகள்.

மண்ணின் மகத்துவமும்
புத்தாக்கத்தின் புரிதல்களும்
மண்ணில் மிகுந்தால்
மகத்துவம் கிட்டும்
பொருளாதாரம் சிறக்கும்

வாழ்க்கை தரம் உயர
வளர்ச்சி அவசியம்
அனுதினம் தொடரணும்
அனைவரும் பெறனும்.

நல்ல கல்வியும்
ஆரோக்கியமான வாழ்க்கையும்
சத்துள்ள உணவும்
வறுமையற்ற நிலையும்
ஏற்றத் தாழ்வின் வீழ்ச்சியும்
சமவாய்ப்பு நிலையும்
அனைவரின் எதிர்பார்ப்பு
பெற்றால் பெறுவோம் பூரிப்பு.

பொருளாதாரம் சிறப்பது
நாட்டை மட்டும் சார்ந்ததல்ல
நல்லுள்ளம் படைத்த
அனைவரையும் சார்ந்தது.

கற்றவர் அறிவு
கல்லாதவர் உழைப்பை
சுரண்டினால்
ஏற்றத்தாழ்வு நீங்காது
பொருளாதாரம் சிறக்காது

கல்வி என்பது பட்டம் மட்டுமல்ல
வாழ்வின் புரிதல்கள்
புரிந்தவர்களின் பட்டம்
பறக்கிறது வானில்
புரிய முயற்சிப்பவர்களின்
வழிமறித்து...

ஏற்றுமதி நிறைந்து
இறக்குமதி குறைந்தால்
நாட்டின் பொருளாதாரம் சிறக்கும்.

புரிய முயற்சிப்பவர்களின்
புரிதல்கள் மிகுந்து
தடையைத் தகர்த்து
ஏற்றுமதி பெருகட்டும்
பொருளாதாரம் சிறக்கட்டும்.


Monday 17 October 2022

பெருமாளும் மாலும்



பெருமாளிடம் பக்தர்கள் கூட்டம்
மாலிடம் வாடிக்கையாளர் கூட்டம்

பெருமாளிடம் பக்தி சுரக்கிறது
மாலிடம் மகிழ்ச்சி பிறக்கிறது

பெருமாளிடம் கோரிக்கை வரம்
மாலிடம் கேளிக்கை வியாபாரம்

மனம் பேசுகிறது பெருமாளிடம்
பணம் பேசுகிறது மாலிடம்

தரிசிப்பவர் கும்பிடுவது பெருமாள்
தரிசிப்பவரை கும்பிடுகிறது மால்

நிறைய ஸ்தலங்கள் பெருமாளிடம்
நிறைய தளங்கள் மாலிடம்

கருட வாகனம் பெருமாளுக்கு
கரண்ட் வாகனம் மாலுக்கு

மனபாரம் இறங்குது பெருமாளிடம்
பொருள் பாரம் ஏறுது மாலிடம்

நடைசாற்றல் உண்டு பெருமாளிடம்
கடைசாற்றல் உண்டு மாலிடம்

லட்டு பிரசித்தம் பெருமாளிடம்
துட்டு பிரசித்தம் மாலிடம்

முடி கொடுக்கிறார்கள் பெருமாளிடம்
முடி திருத்துகிறார்கள் மாலிடம்

காணிக்கை குவிகிறதுபெருமாளிடம்
காண்பவை விரிகிறது மாலிடம்

ஜிஎஸ்டி விதிப்பதில்லை பெருமாள்
ஜிஎஸ்டி இழப்பதில்லை மால்

அருள் தேடுவது பெருமாளிடம்
பொருள் தேடுவது மாலிடம்

அண்ணாச்சி புலம்பல் பெருமாளிடம்
அனைவரும் குவியுராரே மாலிடம்

இறைவனுக்கு நன்றி

 



அறுபதைத் தொட்டு ஓராண்டு ஆயிடுச்சு எனக்கு

அவனைத் தொட ஆண்டுகள் எத்தனை இருக்கு?

ஆயுள்காலம் நாமாய் நீட்டிட வாய்ப்பில்லை

ஆண்டவன் கட்டளை மாற்றம் செய்திட அனுமதியில்லை


மண்ணில் பிறந்தால் மரணம் நிச்சயம்

விண்ணில் தொடரும் செய்த புண்ணியம்

இம்மையில் நன்மையை நிறைவாய் செய்தால்

மறுமையில் செழுமையை உயர்வாய் பெறலாம்.


இறையச்சம் என்னுள் இருப்பது பூரிப்பு

இறைவழிபாட்டில் முழுமை பெறவில்லை தவிப்பு

பணி ஓய்வு பெறும் வரை வாழ்க்கை அலுவலகத்தில்

பணி ஓய்வு பெற்ற பின் வாழ்க்கை ஆனந்தத்தில்.


சராசரியாய் இருப்பதிலும் இருக்கின்றன சங்கடங்கள்

சரிக்கட்டி சமாளிக்க ஏதும் இல்லை பின்புலங்கள்

இருப்பதைக் கொண்டு இயல்பாய் வாழ்ந்துவிட்டேன்

இறைவனுக்கு நன்றி சொல்லி பூரிப்பை பெற்று  விட்டேன்.

கனிவா ?கண்டிப்பா?

 

பெற்ற பிள்ளையை பேணி காப்பது மட்டுமல்ல பெற்றோர்களின் கடமை.

நேர்மைத் திறன் மிக்கவர்களாக சமூக அக்கறை கொண்டவர்களாக உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பு தான். கனிவைக் காட்டி வளர்ப்பதா? கண்டிப்பைக்  காட்டி வளர்ப்பதா? பெற்றோர்கள் முன்னுள்ள கேள்வி.

கனிவு என்பது அன்பானது.கண்டிப்பு என்பது மருந்து போன்றது.மருந்தே உணவானாலும் ஆபத்து . மருந்து இல்லை என்றாலும் ஆபத்து.அளவோடு புகட்டி,ஆனந்தம் பெற்று இளம் தலைமுறையினரை வளர்ச்சியின் பாதைக்கு இட்டுச் செல்லுதல் பெற்றோரின் பொறுப்பு.

எளிமையாகவும் சிக்கனமாகவும் வாழும் வழியை தன் பிள்ளைகளுக்கு கற்றுத் தரும் பெற்றோர்கள், அளவற்ற செல்வங்களை சேர்த்து வைத்து செல்லும் பெற்றோர்களை விட அதிகம் மேலானவர்கள்.

இளைஞர்களின் வாழ்க்கையில் இரண்டு வகை காயங்கள் ஏற்படுகிறது.

ஒன்று உடல் காயம். மற்றொன்று மனக்காயம். உடல் காயத்திற்கு மருந்து தடவலாம். மனக்காயம் எதனால்? அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், உறவுகளின் புறக்கணிப்பு, தனிமை போன்ற பல்வேறு காரணங்கள் இருக்கலாம்.

மனக் காயம் அவர்களின் செயல் திறனைப் பாதித்து வளர்ச்சியைத் தடுக்கும். சூழ் நிலையை உணர்த்தி கட்டுப்பாடோடு வளர்க்கப் படும் குழந்தைகள் மனக் காயத்தைத் தவிர்த்து எதையும் தாங்கும் இதயம் பெறுகிறார்கள்.

கண்டிப்பும் அரவணைப்பும் எல்லை மீறாமல் பயன்படுத்துவது பெற்றோர்களின் பொறுப்பு. பிள்ளைகளின் வளரிளம் பருவத்தில் மேற்கொள்ளக்கூடிய கூடுதல் கவனம் பிள்ளைகளை நேர் வழியில் திசை திருப்புகிறது என்பது உண்மை.