தனக்குவமை இல்லாதான் தாழ் பணிந்து வணங்குகின்றேன்
பார் போற்றும் பாதுகாப்பின் நெறியுணரக் கூறுகின்றேன்
எண்ணியது நடக்குமெனில் எள்ளளவும் கவலையில்லை
எண்ணமது ஈடேற ஏற்றமுடன் பாதுகாப்பு
திண்ணமது கொண்டிட்டால் தீங்கில்லை நம் வாழ்வில்
உண்மையிது உணர்ந்திடுவோம் அதன்பால் உயர்ந்திடுவோம்
உயிர் நிலைத்தும் உறுப்பைக் காத்தும் உறுதியுடன் வாழ்வதற்கு
உற்றதுணை வேறுண்டோ தக்கவழி மாற்றுண்டோ ?
உரமிருக்குது உடல்தன்னில் நினைவிருக்குது மனம்தன்னில்
ஆம் பாதுகாப்பின் அவசியம் எனும் நினைவிருக்குது மனம்தன்னில்
சில முறைகள் சீரியவைகள் நடைமுறையில் கொண்டிடுவோம்
நாள் தோறும் உழைத்திடுவோம் ஏற்றமுடன் வாழ்ந்திடுவோம்
தொட்டால் சுடுவது நெருப்பென்று பட்டபின் பெறுவதா பாதுகாப்பு ?
சட்டத்தால் பெறுவதா பாதுகாப்பு ? உள்ளத்தில் கொள்வதே பாதுகாப்பு
நம் சீரிய செய்கையே பாதுகாப்பு நடைமுறை வழக்கங்கள்
நல்லதொரு செயல்முறைகள் நம் வாழ்வில் கொண்டிட்டால்
துன்பமில்லை துயரமில்லை விபத்து என்பது இனியில்லை
இந்தக் கனவுகளை எண்ணி மகிழ்ந்திருந்த வேளையில்
நினைவுகள் மெல்ல வந்து சிந்தனையைச் சுடுகின்றது
உணர்வுகளை ஒழித்து ஒய்ந்திருந்த வேளையில்
கடமைகள் தலைதூக்கி செயலாற்றத் துடிக்கின்றது
ஒழித்திடுவோம் விபத்துதனை என்றுநிதம் கூறினாலும்
ஓய்ந்த பாடில்லையென மனம் வருந்தி தவிக்கையிலே
ஆறுதலாய் சில வார்த்தை என் செவியினிலே ஒலிக்கிறது
அந்த ஒலியினிலே மனமிணைந்து புதிய ராகம் இசைக்கிறது .
விபத்தே உன்னை நாங்கள் புறக்கணிக்கின்றோம்
ஏனெனில் நாங்கள் எங்களை பாதுகாப்புக்கு அர்பணித்திருக்கிறோம்
எங்களின் மனம் தானே காவலன் அதை உணர்ந்திருக்கிறோம்
அதனால் உன்னை புறக்கணிக்கிறோம்
விபத்தே நீ பழையன தான்! உன்னை அடைபவர்தான் புதியோர்
இது நவீன யுகம் இங்கே பழமைக்கு இடமில்லை
பழமையான உனக்கும் இங்கே இடமில்லை
அதனால் உன்னை நாங்கள் புறக்கணிக்கிறோம்
நான் ஒரு பொது உடமை வாதி என்று ஆர்ப்பரிக்கும் விபத்தே
உந்தன் பொது உடைமைத் தத்துவத்தை கவலையின்றி
ஒருகாலத்தில் ஏற்றுக் கொண்டிருந்த நாங்கள் - தற்போது
பாதுகாப்புத் தத்துவத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறோம்
அதனால் உன்னை நாங்கள் புறக்கணிக்கிறோம்
ஒரு தவறு செய்தால் அதை தெரிந்து செய்தால்
தேவன் என்றாலும் விடமாட்டேன் என்கின்ற விபத்தே
தெரியாமல் செய்தால் மட்டும் விட்டு விடுவாயா?
அதை மட்டுமாவது மன்னிக்கின்ற குணமில்லையே
பிழை பொறுக்கும் தன்மையில்லையே
அதனால் உன்னை நாங்கள் புறக்கணிக்கிறோம்
விபத்தே உன்னால் நடக்க மட்டும் தான் முடியும்
விபத்து இங்கே நடந்தது எனத்தானே கூறுகின்றோம்
ஆனால் மனிதனால் நடக்கவும் முடியும்
அதை விட ஓடவும் முடியும்
எனவே நடக்கும் விபத்தை மடக்கிப் பிடித்து
மூலையில் அடைக்க எங்களால் முடியும்
அதனால் உன்னை நாங்கள் புறக்கணிக்கிறோம்
சுவரை வைத்து நாங்கள் சித்திரம் வரைகின்றபோது
சித்திரத்தையே பெரிதாக நினைத்திருந்தோம்
சுவர் என்ற சூழ் நிலையை மறந்திருந்தோம்
நீயும் அதில் வேதனை வர்ணங்களை தீட்டி விட்டாய்
உன்றன் சூட்சுமத்தை உணர்ந்து விட்டோம்
சூழ்நிலையை திருத்தி வருகிறோம்
அதனால் உன்னை நாங்கள் புறக்கணிக்கிறோம்
எங்களில் சிலர் சுயநலம் வேண்டி பொதுநலம் மறந்து
செய்கின்ற செய்கைகள் உனக்கு சாதகமாகின்றது
சாகா வரம் பெற்றவன் என்ற இறுமாப்பும் பிறக்கின்றது
நீ வருந்த வேண்டுமானால் நாங்கள் திருந்த வேண்டும்
எனவே திருந்தி விட்டோம் தீர்மானம் நிறைவேற்றி விட்டோம்
தீர்ப்பும் அளிக்கப்பட்டுவிட்டது உன்னைப் புறக்கணிக்க வேண்டுமென்று
உன்னைப் புறக்கணித்தால் போதும் நீ ஒழிந்து விடுவாய்
எங்களுக்குத் தெரியும் நீ எங்களை வைத்தே வாழ்கிறாய் !
No comments:
Post a Comment