மனதின் வெளிப்பாடு


Tuesday 10 December 2019

நீ இன்றி வாழ?


ஓயாத இருமலால்
அவதியுறுகிறேன்
நெடுநாட்களாக....

கற்பூரத்தை
கனலில் காட்டி
மார்பில் தேய்த்தால்
சளி குறையுமாம்
வழி சொன்னார்கள்...

மனதில் பதிந்த
என்னவள்
சூடு தாங்காமல்
தவிப்பாளென்ற
வலி புரியாமல்.....

தூதுவளை சாப்பிட்டால்
மிக நல்லதாம்
சொன்னார்கள்
எனக்கான தூது
அவள்தான் என்று
அறிந்துகொள்ளாமல்....

வெற்றிலைச்சாறு நல்லதாம்
குடிக்கச் சொன்னார்கள்

வெற்றிலை தட்டு ஏந்தி
அவள் இல்லம் சென்று
நிச்சயிக்க மறுத்துவிட்டு...

ஓமம் நல்லதாம்
சொன்னார்கள்
ஹோமம் வளர்த்து
அவள் கரம்பற்றி
என்னிடம் ஒப்படைக்க
மனமின்றி...

மருத்துவரை நாடினார்கள்
மருந்தை
தவறாமல் தந்தார்கள்.

அவளை
மணமுடித்து தர
மனமின்றி...

மருந்தை
உண்டு செரித்தால் தானே
பலனளிக்கும்
மென்று துப்பினால்?

வலி குறைய வழியின்றி
சளி குறைய வாய்ப்பில்லை
எப்படி புரிய வைப்பேன்?

சளி முற்றினால்
காசம் வருமாம்
சொன்னார்கள்...

சுவாசம்
புறம்தள்ளி
மண்ணில் வாசம்
எப்படி சாத்தியம்?
என் சுவாசமே
அவள்தான் என்று
அறியாமல் பேசுகிறார்கள்...

நான் இருமுவது கண்டு
பொருமுகிறார்கள்
அவளை வெறுத்து...

ஓயாது இருமுகிறேன்
ஒவ்வொரு முறை
இருமும் போதும்
அவள் பெயரை உச்சரிக்கிறேன்..

என் உயிரில் கலந்த
அவள் பெயரை
உச்சரிப்பதால்
அடிக்கடி
தொடர்ந்து இருமுகிறேன்
என்னையும் மீறி....

No comments:

Post a Comment