எல்லோருக்கும் எப்போதும்
எல்லாமும் தெரிவதில்லை
என்றாலும் வாழ்கிறோம் எல்லோரும்
வாழ்வின் புரிதலை
புரிந்து கொண்டவர்களை தேடி வாய்ப்புகள் வலம் வருகின்றது
தெரிந்ததைக் கொண்டு
தெரிய வேண்டிய இடத்தில்
மிகச்சரியாய் தெரியப்படுத்தி
சந்தோசமாய் நகர்கிறது
சிலரின் வாழ்க்கை
நிறையத் தெரிந்தும்
புரிதல் இல்லாத அறிதலால் சங்கடத்தோடு நகர்கிறது
பலரின் வாழ்க்கை
அன்றாட வாழ்வில்
அநேக விஷயங்கள்
அனுதினமும் அரங்கேறுகின்றது
கற்றவர்கள் எல்லாம் பெற்றார்களா?
எல்லாம் பெற்றவர்கள் கற்றவர்களா?
பட்டம் அறிதலின் அங்கீகாரம் மதிப்பெண் அதன் அடையாளம்
அடையாளத்தை மையப்படுத்தி மட்டும் வாய்ப்புகள் நிலைப்பதில்லை
சூழ்நிலையை புரிந்து
கற்றதை வாழ்வோடு பொருத்தும்
சக்தியைப் பெற்றவர்களே சாதிக்கிறார்கள்
உழைப்பில் உண்மையும்
நேர்மையும் அவசியம்
அதைவிட
அடுத்தகட்ட முன்னேற்றத்திற்கு
ஒவ்வொருநாளும் சிந்திப்பது
மிக மிக அவசியம்.
உன்னை அறி முதலில்
உயரும் வழி எதிரில்
உண்மையான அறிதலால்
புரிதல் மேம்படும்
புரிதல் மேம்பட
பாதை தெரிந்திடும்
பாதை தெரிந்திட
பயணம் தொடர்ந்திடும்
பயணம் தொடர்ந்திட
உலகம் வசப்படும்.
No comments:
Post a Comment