❤️
அகிலம் யாவையும் அழகுற ஆக்கி
அருள் பாலிக்கும் அருட்கொடையாளன்
எல்லாம் வல்ல இறைவனின் அருளால்
அறிவிற் சிறந்த பெரியோர் மற்றும்
சுற்றமும் நட்பும் சூழவிருக்கும்
இம்மண மன்றலில் மகிழ்வுடன் திகழும்
மணமக்களுக்கு
அளிக்கின்றேன் அறிவுரை அன்புடன் ஏற்க.
இல்லற மல்லது நல்லற மன்றென
இயம்பினார் அவ்வை ரத்தினச் சுருக்காய்
அறனெனப்பட்டதே இல்லற வாழ்வென
அடித்துச் சொன்னார் வள்ளுவர் தானும்
நல்லறங்க ளாற்றி கனவேள்வி நடத்திடனும்
இல்லறத்திற் கிணையாமோ இவையெலாம்
என விளித்தான் பெரும் புலவன் பிசிராந்தை
இல்லற வாழ்வை ஏற்காதிருப்போன்
என் வழிச்சாரான் எனவே கூறி
இல்லற வாழ்வை வலியுறுத் திட்டார்
இஸ்லாம் தந்த மாநபி யவர்கள்...
நாடு போற்றும் நல்லறமாம் இல்லறத்தை
நடத்திடுதல் எளிதாமோ? நவிலக் கேட்போம்
கல்லும், முள்ளும், புதர்களும் நிறைந்த
காட்டுப்பாதை என்றனர் சில பேர்
புயலில் சிக்கி கடலின் நடுவே
நிற்கும் கலமென செப்பினர் சிலபேர்..
இல்லற வாழ்க்கை இனிதாய் அமைய
கவனம், பொறுப்பு மிகவும் தேவை
என்பதைச் சொல்லவே இவ்வாறெல்லாம்
அச்சுறுத்திச் சென்றனர் அனுபவசாலிகள்
நேற்று வரை நீ யாரோ? நான் யாரோ?
என்றிருந்த நீவீர் இன்று முதல்
நீ வேறா? நான் வேறோ? என இணைந்தீர்
புகைவண்டி செல்லும் பாதை யதற்கு
தண்டவாளங்கள் இரு பக்கம் எனினும்
தடம் என்பது ஒன்றை அன்றோ
பார்க்கும் விழிகள் இரண்டு எனினும்
பார்வை என்பது ஒன்றே அன்றோ..
அதுபோல் உடலால் நீங்கள் இருவர் எனினும்
ஓர் உயிராய் ஒன்றித்து வாழ்தல் வேண்டும்
கணவனும் மனைவியும் ஒருவருக்கு ஒருவர்
ஆடையாய் கருதி வாழச் சொல்லும்
அல்குர்ஆனின் அறவுறை ஏற்று
உன்னுடைய மனைவி உன் உடம்பில் பாதி
என்ற நம் நாயக நன்மொழி சார்ந்து
மணமக்காள் நீவிர் மனமொத்து வாழ்ந்தால்
இன்பமும் உண்டோ இதை விடப் பாரில்..
மணமகளே என் அனுபவம் கொண்டு
அறிவுரை சில கூற ஆசை கொண்டுள்ளேன்
கதையோ கட்டுரை, கவிதைகள் எதுவோ
விறுவிறுப்பாகவோ, விருப்பமுள்ளதாகவோ
ஆக்கும் தன்மை ஆசிரியர் பொறுப்பு..
இல்லற வாழ்க்கை அழகுற அமைய
ஆக்கும் பொறுப்பு உன்னுடையது அறிவாய்
தாம்பத்தியம் என்ற வாழ்க்கையின் வண்டி
கட கட வெனவே ஒழுங்காய் ஓட
அச்சாணி நீயே அறிவாய் பெண்ணே..
ஊனும் உயிரும் குடும்பம் என்றால்
உயிராய் உள்ளது பெண்ணே
உந்தன் பொறுப்பும் பெரிது அறிவாய் நன்று
பிறந்த வீட்டின் பெருமைகள் பேசாது
புகுந்த வீட்டோடு ஒன்றி யிருந்து
கண்ணியம் காத்தல் பெண்ணிற்கு அழகு
அதனால் பிறந்த வீட்டிற்கும் பெருமை
இல்லற வாழ்க்கை இனிதே நடக்க
பெண்ணின் பொறுப்பே பெரிதனக் கூறி
மணமகன் அவருக்கும் ஒரு சில சொல்லி
முடிக்கவிருக்கின்றேன் கவனம் கொள்வீர்.
ஓடும் ரயிலை ஒழுங்காய் நடத்த
கைகாட்டி என்பது அவசியம் அதுபோல்
இல்லற வாழ்க்கை இனிதே நடக்க
புலன்கள் அடக்கமாம் கைகாட்டி தேவை
பெண்கள் ஆண்களுக்கு அடிமைகள் என்ற
பேதமை நீக்கி பெரும் பொறுப்பு அவர்க்கும்
உண்டென நினைத்து ஒருவருக்கொருவர்
விட்டுக் கொடுக்கும் தன்மையோடும்
நேர்மை, நியாயம், வாக்கில் இனிமை
அன்பு, ஆர்வம்,இடம்பெறச் செய்வீர்...
உலகம் உய்ய ஓர் வழி அன்பு
அன்பு, அன்பு அன்பே இறைவன்
மணமக்காள் நீவீர் அன்புடன் வாழ்ந்து
வளமுடன் வாரிசு மகிழவுடன் பெற்று
கசடறக் கல்வியை கற்றிடச் செய்து
அதன்படி நின்று ஒழுகும் பண்பும்
பெற்றோர் விரும்பும் பிள்ளைகளாக
உற்றார், உறவினர் உகப்புடன் ஏற்கும்
மற்ற எவரும் குறை சொல்லாத
நாடு போற்றும் நல்லவர்களாக
நோய், நொடி இன்றி நன்னலத்தோடு
வாழும் பிள்ளைகளாய் வளர்த்து
வாழ்க பல்லாண்டு வாழ்க என வாழ்த்தி
கல்லினுள் தேரைக்கும் கருப்பையுயிர்க்கும்
உள்ளுணர்வு தந்து காக்கும் தயாளன் எல்லாம் வல்ல இறைவனை இறைஞ்சி
பாராட்டும் வாய்ப்பை வழங்கியமைக்கு
நன்றி பாராட்டுகிறேன்..